ஐம்பெருங்காப்பியங்கள் | சிலப்பதிகாரம் | ந.மு.வேங்கடசாமி நாட்டார்
மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு இனத்துக்குப் பீடும், பெருமையும் தருவனவாகும்.
பெருங்காப்பியச் செல்வங்களாக தமிழர் போற்றிக் காப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவை தமிழருக்குக் கிடைத்த அரும்பெரும் கருவூலங்கள். சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும் இது முற்றிலும் தமிழ் தேசியக் காப்பியம். சிந்தாமணியும், வளையாபதியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த சமயக் காப்பியங்கள். தமிழர் தம் வாழ்வு வளம்பெற அணிகலன்களாக அமைந்தவை. இச்செந்தமிழ்க் காப்பியங்கள்.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நெறிகளும் செவ்வனே அமையப்பெற்றதும், இயற்கை வருணனை, நாடு நகர வருணனை, வேந்தன் முடிசூட்டும்நிகழ்வு, போர்மேற் செல்லுதல், வெற்றி பெற்று விழா எடுத்தல் என்பனவற்றோடு, இன்னும் பல நிகழ்வுகளும் அமையப் பெற்றதே பெருங்காப்பியம் என்பர் தமிழ்ச் சான்றோர்.
தமிழகம் அன்றும் இன்றும் வேற்றினத்தார் நுழைவால் தாக்குண்டு, அதிர்வுண்டு, நிலைகுலைந்து, தடம் மாறித் தடுமாறும் நிலையில் உள்ளது. தம்பண்பாட்டுச் செழுமையை நாகரிகமேன்மையை,கலையின்பெருமையை இசையின் தொன்மையை வாழும் தலைமுறையும், வருங்காலத்தலைமுறையும் கற்றுணர்ந்து தமிழர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவ் வருந்தமிழ்ச் செம்மொழிச் செல்வங்களை மீள்பதிப்பாக வெளியிடுகிறோம்.
இச் செம்மொழிச் செல்வங்களுக்குச் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார் செவிநுகர் கனிகள் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையும், பதிப்பு வரலாறும் தந்து எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளார். இப்பெருமகனாருக்கு எம் நன்றி என்றும் உண்டு.
தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், தி.வை சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் இக்காப்பியங்கள் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை இந்நூலுள் பதிவாகத் தந்துள்ளோம்.
அலங்காரங்களும், ஆடம்பரங்களும், படாடோப வாழ்வும் தமிழ் மண்ணில் தலை ஓங்கி ஆட்டம்போடும் காலமிது. விலை வரம்பில்லா இவ் வருந்தமிழ் கருவூலங்களையெல்லாம் தொகுத்துப் பொருள் மணிக்குவியல்களாகத் தமிழர் தம் கைகளுக்குத் தந்துள்ளோம். எம் தமிழ்ப்பணிக்குக் துணைநிற்க வேண்டுகிறோம்.
– பதிப்பாளர்
சிலப்பதிகாரம்
சேரன் இளவல் இளங்கோவடிகளால் கி.பி 2 ஆம் நூற்றாண்டு இறுதியில் எழுதப்பட்டது. அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் எனும் முப்பெரும் உண்மைகளை உலகுக்கு உணர்த்த எழுந்த நூல். கண்ணகி எனும் தமிழ்க் குலமகளின் பெருமையை முன்நிறுத்தி எழுதப்பட்ட செந்தமிழ்க் காப்பியம். தமிழ்த் தேசிய உணர்வைக் கட்டி எழுப்பிய முதல் தமிழ்க் காப்பியம். தமிழ் பண்பாட்டின் சுரங்கம். தமிழ் கலை களின் இருப்பிடம். உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய குடிமக்கள் காப்பியம்.
புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கி மூவேந்தர்களின் நாட்டையும், ஆட்சியையும், அதன் உயர்வையும் தாழ்வையும் ஒப்பக் கருதி தம் புலமை அறிவால் எழுதப்பட்ட நூல். நுண்கலைகளின் களஞ்சியம். அருங்கலைகளின் உறைவிடம். இயல் – இசை – நாடகம் எனும் முத்தமிழ் வளம் நிரம்பிய முத்தமிழ்க் காப்பியம். பண்டைத் தமிழின் சிறப்புகளை தமிழரின் உயர்வை நன்கு அறிவதற்கு தலை வாயிலாய் அமைந்த நூல். இசை இலக்கணம், இசை இலக்கியம், நாட்டியக் இலக்கணம் நாடக அரங்கமைதி, ஆகியன பற்றி தெளிவுற அறிவதற்குச் சான்றாக அமைந்த நூல்.
சிலப்பதிகாரம் ஆசிரியர்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் எழுதியதென வழங்குகிறது. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனது தம்பியாரென்று சிலப்பதிகாரமும் கூறுகிறது.
சிறப்புகள்
இந்த நூலின் தலைவனான கோவலன் ஒரு வணிகன். இந்த நூலின் தலைவி கண்ணகி ஒரு வணிகப் பெண். இப்போது இருக்கின்ற தமிழ்க் காப்பியங்களில் மிகப் பழமையானதான இச் சிலப்பதிகாரம் அரசர் முதலியோரைக் காப்பியத் தலைவராகக் கொள்ளாமல் பொது மக்களையே தலைவராகக் கொள்ளும் குடி மக்கட் காப்பயிமாக விளங்குவது இதன் சிறப்பாம். இது வணிக மக்கள் சிறப்படைந்த காலத்துக் காப்பியம் ஆகலாம்.
சிலப்பதிகாரம் என்ற பெயர் பெண்ணொருத்தி, அனைத்தையும் பொறுக்கும் நோன்புத் தீயில் குறைகளையெல்லாம் எரித்துப் பொன்னே போலத் தூயவளாய்த் தெய்வமாகின்ற கதையே சிலப்பதிகாரக் கதை. அவளது திருமணத்தின் போது காலில் சிலம்பணிகிறாள் கண்ணகி.கோவலன் பிரிந்த பொழுது சிலம்பு பேழைக்குள் புகுகிறது. அவன் மாதவியைப் பிரிந்து வந்ததும் விற்பதற்கு அதைக் கையில் எடுக்கின்றான். அவளன்றிப் பிறர் அதனால் வாழார் போலும். அதனை எடுத்து விற்கச் சென்ற கோவலன் மதுரையில் கொலையுண்கிறான். பாண்டிமாதேவியின் சிலம்பென அதனைக் கைப்பற்றிய பாண்டியன் உண்மை உணர்ந்து உயிர் துறக்கின்றான். அணிவாரின்றிச் சிலம்பு சிதைந்து கிடக்கிறது. பாண்டியன் மேலெழுந்த வெறுப்பெல்லாம்மாறி, அன்புருவாய்க் கண்ணகி செங்குட்டுவனெதிலே கடவுளாய்க் காட்சியளிக்கும் பொழுது பழையபடி காலில் பொற்சிலம்பு பொலிந்து விளங்குகிறது.
இவ்வாறு சிலம்பொடு சேர்ந்து இந்தக் கதை ஓங்கியும் தாழ்ந்தும் வீறு பெற்றும் வருவதால், சிலப்பதிகாரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது பொருத்தமேயாம்.
சிலப்பதிகாரம் அறிந்தார் பதினேழாம் நூற்றாண்டில்தான் கோவலன் கதை எளிய நடையில் அமைந்த அகவலில் வேறொரு நூலாக வழங்கி வந்திருக்கிறது. அதற்கு முன் வழங்கியது சிலப்பதிகாரம் ஒன்றே ஆம். பரிமேலழகர், மயிலைநாதர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், இளம்பூரணர் முதலியோரால் சிலப்பதிகாரம் காட்டப் பெற்றுள்ளது. இந்த உரைகளுக்கு முந்திய களவியல் உரையிலும் சிலப்பதிகார எடுத்துக் காட்டுகள் பல உள்ளன இவ்வுரை ஏழாம் நூற்றாண்டயதென்று கூறப்பெறும் பிற உரையாசிரியர்கள் இதனைச் சுட்டுதலின் இவ்வுரை 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் பிந்தியதெனக் கூறுவதற்கு வரலாறு
இல்லை.
சிலப்பதிகாரத்தில் காணும் குறிப்புகளைக் கொண்டு இந்திய நாட்டின் வரலாற்றினை ஆராய்ந்து கி.பி. 2 – ஆம் நூற்றாண்டே இக்குறிப்புகள் இந்திய நாட்டில் விளங்கிய காலமாகும் என்று இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் கூறி யுள்ளார்.
“தமிழ் இலக்கிய வரலாறு” தெ.பொ.மீ.
காவ்யா வெளியீடு.
நூற் குறிப்பு
நூற்பெயர் : ஐம்பெருங் காப்பியங்கள் -1 சிலப்பதிகாரம்
உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2014
தாள் : 16கி. வெள்ளைத்தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் :32 + 784 = 816
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 760/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர்கணினி தி.நகர், சென்னை – 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர், பிரிண்டர்ஸ் : வெங்கடேசுவரா ஆப்செட்
இராயப்பேட்டை, சென்னை – 14.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2- சிங்காரவேலர்தெரு,
தியாகராயர் நகர், சென்னை- 600017.
பொருளடக்கம்
பதிப்புரை
செவிநுகர்
அணிந்துரை
சிலப்பதிகாரம் பதிப்பு வரலாறு
நுழையுமுன்
முகவுரை
இளங்கோவடிகள் வரலாறு
அரும்பதவுரையாசிரியர் வரலாறு
அடியார்க்கு நல்லார் வரலாறு
பதிகம்
உரை பெறு கட்டுரை
புகார்க் காண்டம்
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம் படுத்த காதை
3.அரங்கேற்று காதை
4.அந்திமாலைச் சிறப்புச்செய் காதை.
5.இந்திர விழவூரெடுத்த காதை
6.கடலாடு காதை
7.கானல் வரி
8.வேனிற் காதை
9.கனாத்திற முரைத்த காதை.
10 நாடு காண் காதை
மதுரைக்காண்டம்
11. காடுகாண் காதை
12. வேட்டுவ வரி.
13.புறஞ்சேரியிறுத்த காதை
14. ஊர்காண் காதை
15.அடைக்கலக் காதை.
16.கொலைக்களக் காதை
17 ஆய்ச்சியர் குரவை.
18. துன்ப மாலை
19 ஊர்சூழ் வரி
20 வழக்குரை காதை
21 வஞ்சின மாலை
22.அழற்படு காதை
23.கட்டுரை காதை

வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரவை.
25. காட்சிக் கோதை
26 கால்கோட் காதை.
27. நீர்ப்படைக் காதை.
28. நடுகற் காதை.
29 வாழ்த்துக் காதை
30 வரந்தரு காதை
நூற் கட்டுரை
அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை
ஐம்பெருங் காப்பியங்கள் | சிலப்பதிகாரம்
உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
தமிழ்மண் பதிப்பகம்
2- சிங்காரவேலர்தெரு,
தியாகராயர் நகர்,சென்னை-600 017.
Leave a Reply